Friday 2 August 2013

நான் விரும்புவதெலாம்

நித்தம் உன்
நினைவு கண்டு
என் சித்தம் எங்கும்
இரத்தம் சிந்துதடி.

நான் விரும்புவதெலாம்...
உன்னிடத்தில்
எனக்கான
ஓர் இடம்
என்னில் முதலாய் நீ..
உன்னில் முடிவாய் நான்.

நான் விரும்புவதெலாம்...
என் கவிதைகளுக்கெலாம்
கருவறையாய்
உன் இதயம்
உன் கனவுகளில் கூட
உனக்கான
காதலனாய் நான்..

நீ வாத்தியக்கருவியானால்
நான் கூட இசைக்கலைஞன் தான்
உன்னை மீட்டும் போது.
மங்கையர் நூலகத்தில்
நான் கண்டெடுத்த
புத்தகம் நீ..!
உன்னை முழுவதுமாய்
படிக்க ஓர்நாள் ஆசை...

நான் விரும்புவதெலாம்...
உன்னில் பாதியல்ல
முழுவதுமாய்
வாழ ஆசை...
உன் ஆடை மீது
எனக்கு கோபம்...
உன் பிரபஞ்ச அங்கத்தில்
எனக்கோர் பிறவி வேண்டும்.
தலை முடி முதல்
பாத அடி வரை
உன் விருப்பம்.

நான் விரும்புவதெலாம்...
உன் மேனி எங்கும்
என் முத்த
அடையாளங்கள்..
கைபடா இடங்களிலெலாம்
என் கையெழுத்து...
கச்சேரி முடிந்ததும்
உன் காதோரம்
என் கவிதை...!

நான் விரும்புவதெலாம்...
நம் இருவருக்குமிடையில்
இடையூறு ஏதேனும்
வராத நேரம்
இடைவேளை ஏதும்
தராத நேரம்.
விடியும் வரை உன் வாசம்
விடிந்தபின் உன் சுவாசம்

காலை நேர காபியாய்
உன் முத்தம்
தினம் ஓர் சுவை அது
தித்திக்கும் அறுசுவை..!
மல்லிகைப்பூ கைகளில்
வெள்ளைப்பூ இட்லி
தொட்டுக் கொள்ள
எதுவும் வேண்டாம்
கட்டிக் கொள்ள
உன் கைகள் போதும்..!
விக்கல் வந்தால்
உன் விரலில்
தண்ணீர் குடிப்பேன்
சிக்கல் வந்தால்
உன் மடியில்
கண்ணீர் வடிப்பேன்..!

முடிவாக,
நான் விரும்புவதெலாம்...
காலந்தோறும் உன் காதல்
கடைசி வரை உன் தேடல்
மோகம் தீர்ந்த வேளையிலும்
முத்தமிட உன் உதடு...
நரை விழுந்த வேளையிலும்
நான் விரும்பும் காதலியாய் நீ..!



                                                         -தமிழ்ஹாசன்

No comments:

Post a Comment