நேற்று மாலை சென்னை சர்வதேச திரைப்பட விழாவினைக் காண சிட்டி செனட்டரில் உள்ள தியேட்டர் ஒன்றிற்கு சென்றிருந்தேன். அரங்கில் கூட்டம் வழிந்து நிரம்பி நின்று கொண்டிருந்தது. சரி ஏதோ நல்ல படம் என்று நினைத்து நானும் கூட்டத்தில் நுழைந்து கொண்டேன். உள்ளே சென்று அமர்ந்த சிறிது நேரத்தில் " குமா " ( KUMA ) என்றொரு ஆஸ்திரிய நாட்டு திரைப்படம் திரையிடப்பட்டது. " குமா " என்றால் இரண்டாம் மனைவி என்று பொருள். துருக்கியில் எங்கோ ஒரு கிராமத்தில் இருக்கிற ஆயிஷா என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டு மாப்பிள்ளை வீட்டார் அவர்களுடன் கூட்டிச் செல்கின்றனர். அங்கே சென்றதும் அங்கிருப்பவர்களால் முதலில் ஒரு வேற்று வித மனுஷியை போல் ஆயிஷா நடத்தப்படுகிறாள். அவர்கள் கலாச்சாரப்படி மகன் திருமணம் செய்து கொண்டு வரும் பெண்ணுடன் மகனின் அப்பா அதாவது அப்பெண்ணின் மாமனார் அவரே முதல் புருஷனாகக் கருதப்படுவார். அவ்வாறே அவருடன் சாந்தி முகூர்த்தம் நடக்கிறது. பின்னொரு நாளில் அவர் இறந்து விட ஆயிஷா ஓர் குழந்தைக்கு தாயாகிறாள். பின் தன் ஒரிஜினல் கணவனுடன் சந்தோசமாய் காலம் களிப்பதயே எண்ணி மகிழ்கிறாள். ஆனால், அவள் கணவன் தான் ஒரு ஆண் இல்லையெனவும் தன்னால் உனக்கு எவ்வித சந்தோசமும் தர இயலாது எனவும் கூறி அழுகிறான். இதனை கேட்ட ஆயிஷா மனமுடைந்து போகிறாள் தன் ஏக்க உணர்வை வெளியில் சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளே கதறி தினந்தோறும் அழுகிறாள். பின் ஒருநாள் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்ல தாயாராகிறாள் ஆயிஷா. அங்கே உடன் பணி புரியும் ஒருவனுடன் தகாத உறவு வைத்து கொள்கிறாள். இறுதியில் இது அவள் வீட்டிக்கு தெரிய வர அவளை அடித்து உதைத்து விடுகிறார் அவள் மாமியார். இறுதியில் தான் பல பல கனவுகளுடன் இங்கு வந்தேன் அது எனக்கு கிடைக்கததால் தான் இவ்வாறு என் கனவினை தேடி சென்றேன் என்று ஆயிஷா சொல்வதோடு படம் முடிவடைகிறது. திரையிட்ட சில நேரங்களிலே நான் ஆயிஷாவுடன் ஒன்றிபோய் விட்டேன். இதில் வரும் ஆயிஷா என்கிற பெண்ணின் மன போராட்டமே இதன் கருவாய் சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படி எத்தனை ஆயிஷாக்கள் இன்னும் நம்மில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்..? நம் தங்கையாய், நம் சகோதரியாய், நம் தோழியாய், நம் முன்னால் காதலியாய் இப்படி நமக்கே தெரியாமால் நம்மை சுற்றிலும் எதாவது ஒரு உறவு முறையில் ஆயிஷா இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாள். ஒரு பெண் தான் பிறந்து வளர்ந்து பாதி வயது வரை வாழ்ந்து வந்த தன் வீட்டையும், சிறுவயது முதல் இவர்கள்தான் நம் உலகம் என நினைத்த பெற்றோரையும் விட்டு விட்டு திருமணம் முடிந்த கையோடு வருகிற வீட்டில் எத்தனை விதமான கனவுகளோடும் ஏக்கங்களோடும் வருகிறாள்..? அப்படிப்பட்டவளுக்கு முழு சுதந்திரமும், முழு சந்தோசத்தையும் தருகிறதா இந்த சமூகம் என்றால் அது வெறும் கேள்விக்குறியே...! இத்தனை வருட கால தன் பழக்க வழக்கங்களை தன் குணங்களை எங்கிருந்தோ வருகிற ஒரு குடும்பத்திற்காக மாற்றிக்கொள்ளும் அந்த மனப்பக்குவம் யார் சொல்லி தந்தது பெண்ணிற்கு..? புருஷன், மாமனார், மாமியார், மைதினி, மட்சினன், மாமனார் மகள் வயிற்று பேரன் மகள் வயிற்றுப் பேத்தி என சொல்லிகொள்ளும் அத்தனை உறவு முறைகளையும் வருகிற பெண் புரிந்து கொள்ளல் வேண்டும். அவர்களுக்கு தேவையான பணிவிடைகளும் தவறாமல் செய்ய வேண்டும் என்பது காலம் காலமாய் பின்பற்றி வரும் ஒரு பெண் அடிமைத்தனம். அதை விட முக்கியமாக் புருஷனோடு இருக்கும் போது மனைவியாக நடந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை நடிக்கவாவது வேண்டும் அந்த பெண். எப்பேற்பட்ட பிறப்பு...! தன் தேவை நிறைவேறினால் போதும் என நினைக்கும் ஆண் குடும்பம் அவள் தேவை என்ன என்பதை ஒருநாளும் யோசித்துப் பார்ப்பது இல்லை.. எந்த நேரம் மாமியார் தன்னை திட்டுவார், எந்த நேரம் மாமனார் வேலை வாங்குவார், எந்த நேரம் திடிரென்று பின்னால் வந்து புருஷன் கட்டியணைப்பான் என ஒவ்வொரு நிமிடமும் ஒரு பட படக்கும் நெஞ்ஜோடவே வீட்டினுள் நடமாடிகொண்டிருக்கிறாள் பெண். அவளுடைய ஆசைகளும், கற்பனைகளும் அங்கு நிறைவேறாமல் போகிற போது தான் அவள் சுயநலமாய் வாழத்தொடங்கி விடுகிறாள். தான் விரும்பி கேட்டு கிடைக்காத ஒரு பொருளை தானே முன்வந்து வாங்கி கொல்கிறாள். தான் விரும்பி சாப்பிட நினைக்கும் உணவினை கூட அவள் தானே சென்று தன் விருப்பபடி அமைத்துக்கொள்ளவும் செய்கிறாள். அதற்கு வேலையும் ஒரு பெரும் உதவியாய் இருக்கிறது.. தேவை, பொருளாதாரம் இவ்வாறு அவளுக்கு கிடைக்காத ஒன்றை போலவே அவளது தாம்பத்யமும் இருந்தால் அவள் கதி...? அவள் எங்கே செல்வாள் தனியாய் என்ன செய்வாள்..? ஒரு பெண் திருமணம் முடிந்தும் தாம்பத்ய சுகம் அனுபவிக்க வழி இல்லாமல் அவதிப்படும் தவிப்பை அவள் தாய் தவிர வேறு யாராலும் அறிந்து கொள்ள முடியாது. ஆசையாய் ஒரு பெண்ணை கட்டிகொடுத்து சந்தோசமாய் புகுந்த வீட்டிற்கு வழியனுப்பி வைத்துவிட்டு பின்னாளில் அவள் தன் கணவன் " அதற்கு லாயக்கு இல்லை " என தெரிந்தததும் நீ வாழ்ந்தது போதும் எங்களுடனே வந்து விடு என சொல்லும் எத்தனையோ தாய்மார்களை நான் பார்த்திருக்கிறேன். காரணம் பெண் மனம் என்ன என்பதை ஒரு பெண்ணே அறிவாள். எதை வேண்டுமானாலும் சகித்து கொண்டு வாழத்தொடங்கும் பெண் இதை மட்டும் வாழ்க்கையில் சகித்துக் கொள்வதே இல்லை. இங்கு நான் குழந்தை பிறக்காத தம்பதியரை பற்றி குறை சொல்லவில்லை. அவர்கள் திருமணம் செய்ய போகும் முன்னரே அறிந்திருக்க மாட்டார் தனக்கு குழந்தை பிறக்காது என்பதை.. தான் ஒரு போதும் மனைவியை தொட கூட முடியாது என்பவன் மட்டுமே இங்கு தண்டனைகுரியவன் ஆவான். ஒரு பெண்ணின் வாழ்கையை உயிரோடு அழித்துவிட துடிக்கும் அரக்கனுக்கு சமானவன் அவன். திருமணத்திற்கு முன் இவள் " கன்னித்தன்மை " உள்ளவளா என்பதை எதிர்பார்க்கும் சமூகம் இவன் " ஆண் தன்மை " உள்ளவன் தானா என்பதை ஒருபோதும் பார்ப்பதே இல்லை.. காரணம் அவன் ஆண். பெண்ணடிமைத் தனம் என்பது பெண்களுக்கு இறைவனால் இயற்கையிலே படைக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. சுகமான தாம்பத்யத்தில் கூட ஆணின் கீழ் தான் பெண் இருக்கிறாள். இது இயற்கையால் எழுதி வைக்கப்பட்ட விதி..! முடிவாக, அவள் தேவிடியா, வேறொருவனின் கள்ளக் காதலி என்றெல்லாம் வசைபாடும் ஆண் சமூகத்திற்கு நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் ஆண்கள் நாம் நம்மை மாற்றிக் கொள்ளாதவரை பெண்கள் மாறப் போவதில்லை.. நாம் ஆயிஷா போன்ற பெண்களை நாட்டிலிருந்து வேரோடு அளிக்க முயற்சிக்க வேண்டாம் அவர்களை உருவாக்காமல் இருந்தாலே போதும்...!
- தமிழ்ஹாசன்