Thursday 20 December 2012

ஆயிஷா




                                  நேற்று மாலை சென்னை சர்வதேச திரைப்பட விழாவினைக் காண சிட்டி செனட்டரில் உள்ள தியேட்டர் ஒன்றிற்கு சென்றிருந்தேன்.  அரங்கில் கூட்டம் வழிந்து நிரம்பி நின்று கொண்டிருந்தது. சரி ஏதோ நல்ல படம் என்று நினைத்து நானும் கூட்டத்தில் நுழைந்து கொண்டேன். உள்ளே சென்று அமர்ந்த சிறிது நேரத்தில் " குமா " ( KUMA ) என்றொரு ஆஸ்திரிய நாட்டு திரைப்படம் திரையிடப்பட்டது. " குமா " என்றால் இரண்டாம் மனைவி என்று பொருள். துருக்கியில் எங்கோ ஒரு கிராமத்தில் இருக்கிற  ஆயிஷா என்கிற பெண்ணை திருமணம் செய்து  கொண்டு  மாப்பிள்ளை  வீட்டார் அவர்களுடன் கூட்டிச் செல்கின்றனர். அங்கே சென்றதும் அங்கிருப்பவர்களால் முதலில் ஒரு வேற்று வித மனுஷியை போல் ஆயிஷா நடத்தப்படுகிறாள். அவர்கள் கலாச்சாரப்படி மகன் திருமணம் செய்து கொண்டு வரும் பெண்ணுடன் மகனின் அப்பா அதாவது அப்பெண்ணின் மாமனார் அவரே முதல் புருஷனாகக் கருதப்படுவார்.  அவ்வாறே அவருடன் சாந்தி முகூர்த்தம் நடக்கிறது. பின்னொரு நாளில் அவர் இறந்து விட ஆயிஷா ஓர் குழந்தைக்கு தாயாகிறாள். பின் தன்  ஒரிஜினல் கணவனுடன் சந்தோசமாய் காலம் களிப்பதயே எண்ணி மகிழ்கிறாள். ஆனால், அவள் கணவன் தான் ஒரு ஆண்  இல்லையெனவும் தன்னால் உனக்கு எவ்வித சந்தோசமும் தர இயலாது எனவும் கூறி அழுகிறான். இதனை கேட்ட ஆயிஷா மனமுடைந்து போகிறாள் தன் ஏக்க உணர்வை வெளியில் சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளே கதறி தினந்தோறும் அழுகிறாள். பின் ஒருநாள் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்ல தாயாராகிறாள் ஆயிஷா. அங்கே உடன் பணி புரியும் ஒருவனுடன் தகாத உறவு வைத்து கொள்கிறாள். இறுதியில் இது அவள் வீட்டிக்கு தெரிய வர அவளை அடித்து உதைத்து விடுகிறார் அவள் மாமியார். இறுதியில் தான் பல பல கனவுகளுடன் இங்கு வந்தேன் அது எனக்கு கிடைக்கததால் தான் இவ்வாறு என் கனவினை தேடி சென்றேன் என்று ஆயிஷா சொல்வதோடு படம் முடிவடைகிறது. திரையிட்ட சில நேரங்களிலே நான் ஆயிஷாவுடன் ஒன்றிபோய் விட்டேன். இதில் வரும் ஆயிஷா என்கிற பெண்ணின் மன போராட்டமே இதன் கருவாய் சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படி எத்தனை ஆயிஷாக்கள் இன்னும் நம்மில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்..? நம் தங்கையாய், நம் சகோதரியாய், நம் தோழியாய், நம் முன்னால் காதலியாய்  இப்படி நமக்கே தெரியாமால் நம்மை சுற்றிலும் எதாவது ஒரு உறவு முறையில் ஆயிஷா இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாள்.  ஒரு பெண் தான் பிறந்து வளர்ந்து பாதி வயது வரை வாழ்ந்து வந்த தன் வீட்டையும், சிறுவயது  முதல் இவர்கள்தான் நம் உலகம் என நினைத்த பெற்றோரையும்  விட்டு விட்டு  திருமணம்  முடிந்த கையோடு வருகிற வீட்டில் எத்தனை விதமான கனவுகளோடும் ஏக்கங்களோடும் வருகிறாள்..? அப்படிப்பட்டவளுக்கு முழு சுதந்திரமும், முழு சந்தோசத்தையும் தருகிறதா இந்த சமூகம் என்றால் அது வெறும் கேள்விக்குறியே...! இத்தனை வருட கால தன் பழக்க வழக்கங்களை தன் குணங்களை எங்கிருந்தோ வருகிற ஒரு குடும்பத்திற்காக மாற்றிக்கொள்ளும் அந்த மனப்பக்குவம் யார் சொல்லி தந்தது பெண்ணிற்கு..? புருஷன், மாமனார், மாமியார், மைதினி, மட்சினன், மாமனார் மகள் வயிற்று பேரன் மகள் வயிற்றுப் பேத்தி என சொல்லிகொள்ளும் அத்தனை உறவு முறைகளையும் வருகிற பெண் புரிந்து கொள்ளல் வேண்டும். அவர்களுக்கு தேவையான பணிவிடைகளும் தவறாமல் செய்ய வேண்டும் என்பது காலம் காலமாய் பின்பற்றி வரும் ஒரு பெண் அடிமைத்தனம். அதை விட முக்கியமாக் புருஷனோடு இருக்கும் போது  மனைவியாக நடந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை நடிக்கவாவது வேண்டும் அந்த பெண். எப்பேற்பட்ட பிறப்பு...! தன் தேவை நிறைவேறினால் போதும் என நினைக்கும் ஆண் குடும்பம் அவள் தேவை என்ன என்பதை ஒருநாளும் யோசித்துப் பார்ப்பது இல்லை.. எந்த நேரம் மாமியார் தன்னை திட்டுவார், எந்த நேரம் மாமனார் வேலை வாங்குவார், எந்த நேரம் திடிரென்று பின்னால் வந்து  புருஷன் கட்டியணைப்பான் என ஒவ்வொரு நிமிடமும் ஒரு பட படக்கும் நெஞ்ஜோடவே வீட்டினுள் நடமாடிகொண்டிருக்கிறாள் பெண். அவளுடைய ஆசைகளும், கற்பனைகளும் அங்கு நிறைவேறாமல் போகிற போது தான் அவள் சுயநலமாய் வாழத்தொடங்கி விடுகிறாள். தான் விரும்பி கேட்டு கிடைக்காத ஒரு பொருளை தானே முன்வந்து  வாங்கி கொல்கிறாள். தான் விரும்பி சாப்பிட நினைக்கும் உணவினை கூட அவள் தானே சென்று தன் விருப்பபடி அமைத்துக்கொள்ளவும் செய்கிறாள். அதற்கு வேலையும் ஒரு பெரும் உதவியாய் இருக்கிறது.. தேவை, பொருளாதாரம் இவ்வாறு அவளுக்கு கிடைக்காத ஒன்றை போலவே அவளது தாம்பத்யமும் இருந்தால் அவள் கதி...?  அவள் எங்கே செல்வாள் தனியாய் என்ன செய்வாள்..? ஒரு பெண் திருமணம் முடிந்தும் தாம்பத்ய சுகம் அனுபவிக்க வழி இல்லாமல் அவதிப்படும் தவிப்பை அவள் தாய் தவிர வேறு யாராலும் அறிந்து கொள்ள முடியாது. ஆசையாய் ஒரு பெண்ணை கட்டிகொடுத்து சந்தோசமாய் புகுந்த வீட்டிற்கு வழியனுப்பி வைத்துவிட்டு பின்னாளில் அவள் தன் கணவன் " அதற்கு லாயக்கு இல்லை " என தெரிந்தததும் நீ வாழ்ந்தது போதும் எங்களுடனே வந்து விடு  என சொல்லும்  எத்தனையோ தாய்மார்களை நான் பார்த்திருக்கிறேன். காரணம் பெண் மனம் என்ன என்பதை ஒரு பெண்ணே அறிவாள். எதை வேண்டுமானாலும் சகித்து கொண்டு வாழத்தொடங்கும் பெண் இதை மட்டும் வாழ்க்கையில் சகித்துக் கொள்வதே இல்லை. இங்கு நான் குழந்தை பிறக்காத தம்பதியரை பற்றி குறை சொல்லவில்லை. அவர்கள் திருமணம் செய்ய போகும் முன்னரே அறிந்திருக்க மாட்டார் தனக்கு குழந்தை பிறக்காது என்பதை.. தான் ஒரு போதும் மனைவியை தொட கூட முடியாது என்பவன் மட்டுமே இங்கு தண்டனைகுரியவன் ஆவான். ஒரு பெண்ணின் வாழ்கையை உயிரோடு அழித்துவிட துடிக்கும் அரக்கனுக்கு சமானவன் அவன். திருமணத்திற்கு முன் இவள்  " கன்னித்தன்மை " உள்ளவளா என்பதை எதிர்பார்க்கும் சமூகம் இவன் " ஆண் தன்மை " உள்ளவன் தானா என்பதை ஒருபோதும் பார்ப்பதே இல்லை.. காரணம் அவன் ஆண். பெண்ணடிமைத் தனம் என்பது பெண்களுக்கு இறைவனால் இயற்கையிலே படைக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. சுகமான தாம்பத்யத்தில் கூட ஆணின் கீழ் தான் பெண் இருக்கிறாள். இது இயற்கையால் எழுதி வைக்கப்பட்ட விதி..! முடிவாக, அவள் தேவிடியா, வேறொருவனின் கள்ளக் காதலி என்றெல்லாம் வசைபாடும் ஆண் சமூகத்திற்கு நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் ஆண்கள் நாம் நம்மை மாற்றிக் கொள்ளாதவரை பெண்கள் மாறப் போவதில்லை.. நாம் ஆயிஷா போன்ற பெண்களை நாட்டிலிருந்து வேரோடு அளிக்க முயற்சிக்க வேண்டாம் அவர்களை உருவாக்காமல் இருந்தாலே போதும்...!                 

                                               

                                                                                                        -  தமிழ்ஹாசன் 
                                      
                                                                                                                                                                                                                                                                                      

Saturday 15 December 2012

மனதில் நின்ற மங்கையர்கள்

                                                

                           உலகில் பிறக்கின்ற பிறப்புகள் யாவும் பெண்ணின் பிறப்புருப்பிலே தொடங்கி பெண்ணின் பிறப்புருப்பிலே  முடிந்து போய்  விடுகிறது . மானிடப் பிறவியும் இதற்கு விதி விலக்கல்ல.... அப்படி தொடங்கி முடிகின்ற வாழ்கையில் இடையினில் எத்தனை விதமான பெண்களைக் காண்கின்றோம் கண்ட காட்சிகளை  நினைத்து துயில்கின்றோம்.... சிறுவர் , பாலகன், மாணவன், இளைஞன், ஆண் இப்படி கடந்து வருகின்ற பருவங்களில் தான் எத்தனை விதமான ஆசைகள்... எத்தனை விதமான உணர்சிகள் பெண்களின் மீது.....  அப்படி வழிந்தோடிய பெண் ஆசைகளைத்  தான் வார்த்தைகளாக்கிருக்கிறேன்  இப்போது... ! 

 சிறுவன் 

இரண்டாம் வகுப்பு என நினைக்கிறேன் அப்போது பள்ளி முடிந்து டியூஷன் செல்கின்ற இடம் நிச்சயமாக அது பிச்சையப்பன் வாத்தியார் வீட்டில் தான்  நடக்கும். சிறு வயது திமிரு, பயமறியா பேச்சு என வாய் என் பேச்சை கேட்காத வண்ணமே இருந்தது. அவர் வீட்டு முன்னால் இருக்கும் பெட்டிக்கடையில் சென்று தின்பண்டங்களை ருசித்துவிட்டு வாய்க்கொலுப்பாய்  " அண்ணே இந்த பிட்சையப்பன் வீடு எங்க இருக்கு? அதானே இந்த பிட்சைஎல்லாம் எடுப்பாரே அவரே தான்..! "  என நான் பெயர்க்கு விளக்கமாய் விளக்கி கேட்க அருகினில் சிகரெட் புகைத்துக்கொண்டிருன்தவர் வா தம்பி நான் காட்றேன் என கூட்டி கொண்டு போய் அவர் முன் நிறுத்தினார்.... அட நமக்கு வழி காட்டிய அதே ஆள்... சார்ர்ர்ர்ர்ர்  ............... என்றே இழுத்தேன் எடுத்தார் பிரம்பை மௌனமாய் பல அடிகள் வாங்கிவிட்டு இது போதாதென்று வகுப்பு முடியும் வரை முட்டிகால் போட சொல்லி வேற தண்டனை.... அந்நேரம் என் அருகில் ஒரு குட்டி தேவதை உட்கார்ந்து கொண்டு எதையோ எழுதிக்கொண்டிருந்தாள்... கண்கள் இரண்டும் அவளையே கண்டிருந்தன... முட்டி வலி போய் கழுத்து வலி வந்து விட்டது.... பேச வேண்டும் போல் ஆசையாய் இருந்தது. உன் பேரென்ன..?  கீதா. என அவள் பேசிய வார்த்தையே போதும் இன்றளவும் அவளை நினைத்து உங்களிடம் பகிர்ந்து கொள்ள...  எனக்கு இருக்கும் மிகசிறிய  கெட்ட பழக்கம்  என் மனதிற்கு பிடித்த பெண்ணை எப்போது கண்டாலும் அன்றிலிருந்து அவளையே என் மனைவியாக நினைத்து கொள்வது... ( மனைவி என்ற வார்த்தையையே மணைவி என்று தான் அப்போது எழுதுவேன்...! )  பார்த்தாச்சு...  பேசியாச்சு....  பிறகென்ன கனவு தானே.... வராத கனவை வலுக்கட்டாயமாக வர வழைத்துக்கொண்டு கனவு காண்பேன். அதாவது. எப்படி என்றால் நான் வளர்ந்து வாலிபன் ஆகிவிட்ட வயது , அன்றைய சினிமாவின் கனவு நாயகன் போன்று தோற்றம், உடை என என்னை முழுவதுமாக ஒரு நடிகனை போலவே எண்ணிகொண்ட பருவம். ஒரு பள்ளியில் ( அது அப்போது நான் படித்த பள்ளி தான்) கொள்ளையர்கள் பலர் வந்து குழந்தைகளை மிரட்டி அடிகின்றனர் அப்போது மறைந்து இருந்து பார்த்த ஹீரோ அதாவது நான் பறந்து வந்து அவர்களை அடித்து துவம்சம் செய்கின்றேன்.... இதனை பார்த்து அங்கிருக்கும் ஆசிரியர்களும் குழந்தைகளும் என்னை பார்த்து கைதட்டுகின்றனர். ( இப்போது இதனை படித்தாலும் அதே கைதட்டல் கிடைக்கும் சற்றே ஏளனமாக..)  அடுத்த கட் பண்ணினால் எங்கோ ஒரு மருதுவமனை அதில் என் மனைவிக்கு பிரசவம் வலியால் கீதா அழுது துடிக்க நான் அவளை சமாதானம் செய்வதாய் கூறி நெற்றியில் மாறி மாறி முத்தம் இடுகிறேன் (அன்றைய கால படங்களில் இப்டி தான் இந்த காட்சியை காட்டினார்கள்...) பின்பு அவளை ஸ்டர்ச்ச்சரில் தள்ளிக்கொண்டு போகிறார்கள்... என்னுடைய பல நேர தவிப்புக்கு பின் ஒரு நர்ஸ் உள்ளிருந்து வெளியே வர என் கை பிடித்தவாறு கங்கிராட்ஸ் நீங்க அப்பவாகிடிங்க...... என் சொல்லி முடித்ததும் கனவாய் நினைத்துக்கொண்டிருந்த கற்பனை கலைந்தது... !   

பாலகன் 

இது நிச்சயம் நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது தான் நடந்திருக்கும் ஏனென்றால் அதுவரை தான் அந்த ஊரில் நாங்கள் இருந்தோம். ஒரு அரசுப்பள்ளி ஐநூறு மாணவ மாணவியர்கள், இருபது ஆசிரியர்கள், வகுப்புக்கு ஓர் தலைவன் என்  வகுப்பில் நான். இருபது மாணவர்கள் இருபது மாணவிகள் என வகுப்பு முழுவதும் கட்டி மேய்க்கும் பொறுப்பு என்னுடையது. இருபது மாணவிகளில் ஒருத்தி முகம் மட்டுமே இப்போது வரை நியாபகம் இருக்கிறது அவள் தான் பெனாசிர். இப்போது தெரிந்திருக்கும் இஸ்லாமியக் கலாசாரம் அப்போது தெரியாததால் வெகு சகஜமாக அவளுடன் பழகி வந்தேன். பக்கவாட்டில் வைத்து எட்டு போட்டார் போல் அழகிய அரை முட்டை கண்கள், மல்லிகை பூக்களை நார்களில் கோர்க்கப்பட்டது போல் வரிசையாய் அடுக்கிவைக்கப்பட்ட பற்கள், எப்போதும் சிரித்த முகம் இதுவே அவளின் பளிச்சிடும் அடையாளங்கள்.  அவள் கண்களின் மீது எப்போதும் எனக்கோர் மயக்கம் உண்டு . நான் முதல் ரேங்க் அவள் இரண்டாம் ரேங்க், அவள் முதல் ரேங்க் நான் இரண்டாம் ரேங்க் என மாறி மாறி தேர்வுகளில் எங்கள் அன்பினை மையினில் நிரப்பி எழுதி வந்தோம். பிறகென்ன அன்றிலிருந்து அவள் என் மனை(ணை )வியானாள். அதே இரவு நேரக்கற்பனை, அதே நடிகன் போல் தோற்றம், அதே சண்டை , அதே பிரசவம், அதே முத்தம், அட நர்ஸ் கூட அதே ஆள் தான்.. மீண்டும் நான் அப்பாவானேன்(!). ஒருமுறை விளையாட் டாய் அவளது சிலேட்டில் நானும் என் நண்பனும் பழைய பட பாடல் ஒன்றை எழுதி விளையாடிக்கொண்டிருந்தோம் அதனைக் கண்ட அவள் சிலேட்டை திருப்பி தருமாறு கேட்டாள் நானும் ஒரு பந்தாவுக்காக சிலேட்டினில் " அன்பி மலர்களே ஆசை நொஞ்சங்களே...... " என் ஓர் பழைய பாடலை தப்புத்தப்பாய்  எழுதி நண்பனிடம் கொடுத்து அவளிடம் கொடுக்கச் சொன்னேன்.. அந்த எமகாதகன் ( பெயர் அழகர்சாமி என்கிற வினோத் ) அவள் காதில் என்ன ஒதினானானோ தெரியவில்லை அதைப் படித்ததும் ஓ.... வென்று அழத்தொடங்கிவிட்டாள். எனக்கு அடிவயிறு கலக்கிவிட்டது. எதுக்கு அழுகிறாய் என அருகில் சென்று கேட்டது தான் தாமதம் அருகில் அமர்ந்த்திருந்த டீச்சரிடம் சென்று " டீச்சர் தினேஷ் எனக்கு லவ் லெட்டர் எழுதிட்டான் டீச்சர் " என சொல்லி திரும்ப அழுகையை தொடங்கிவிட்டாள். அவ்வளவு தான்..... அந்த டீச்சர் பார்த்த பார்வை இருக்கிறதே...  இதற்க்கு மேல் கொஞ்சம் கற்பனை செய்து கொள்ளுங்கள் .... நான் ஒன்றும் சொல்லத் தேவையில்லை...  பின்னொரு நாள் நாங்கள் அந்த ஊரை விட்டு கிளம்பவேண்டிய நேரம் எனது பள்ளியில் எனக்கு கடைசி நாள். ஒரு தெருமுனையில் நின்று கொண்டு அவளும் நானும் பார்வையாலே பேசிக்கொண்ட அந்த தருனங்கள் தமிழ் சினிமாவில் கட்டயாம் காண்பிக்கப்பட வேண்டிய காட்சி... ( தயவு செய்து என் படத்தினில் எதிர்பார்க்க வேண்டாம் ...! )   


மாணவன் 
என் வாழ்கையில் திரும்பி செல்லும் பருவம் என்று ஒன்று இருந்தால்  நான் இந்தப் பருவத்திற்கே செல்ல ஆசைப்படுகிறேன். பெண்களின் முகத்தோடு முழு உடலினையும் காண துடித்து இது தவறென்று மனதிற் கொள்ளாமல் வளர்ந்து வந்த பருவம். பார்கின்ற பெண்கள் எல்லாம் அழகு ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதமாய் அழகு என புரிந்திடாத ஆனால், அதனை அனுபவித்து வந்த பருவம். அதுவரை உணர்சிகளற்று இருந்த உடம்பில் திடீரென ஓர் உணர்ச்சி மாற்றம் ஏற்பட்ட  நேரம். இது என்னவென்று புரியாமல் எடுத்துச் சொல்ல ஆளில்லாமல் அறைக்குள்ளாகவே படுத்திருந்து அரைமணி நேரம் கழித்து  ட்ரவுசரில் ஒட்டியிருக்கும் வழவழப்பான வெள்ளை நிற ஈரம் கண்டு என்னவோ ஏதோவென்று நினைத்து பயந்து நடுங்கிய நரகமான நாட்கள்...  கனவினிலே பெண்கள், கற்பனையிலே  பெண்கள், காணும் இடமெல்லாம் பெண்கள் என கண்கள் இரண்டும் புல்லினை மேயும் மாடுகளாய் அலைந்து திரிந்து கொண்டு இருந்தன. பத்தாம் வகுப்பு காலை முழுவதும் நண்பர்களுடன் பள்ளியில் மாணவிகளைப் பற்றிய பேச்சு மாலை பள்ளி முடிந்து டியூசன் சென்றதும் மாணவிகளிடம் பேச்சு என எங்களை சுற்றி எப்போதும் பெண்கள் கூட்டமாய் நினைத்து வாழ்ந்த வந்த பருவம். அங்கே தான் அவளைக் கண்டேன் மன்னிக்கவும் அவள் என்னைக் கண்டாள்  டியூஷனில்.  பெயர் குண சுந்தரி ஒல்லியான தேகம் சற்றே ஒடிசலான முகம், தெற்றுப்பல் தெரிய சிரிப்பு என்பதே அவளின் அடையாளமாய் நான் கருதி வருகிறேன் என்னவென்று சொல்ல.... என்னையும் எந்நேரமும் கவனித்துக்கொண்டே இருக்க ஓர் ஆள் உள்ளது என்பதை எனக்கு உணர்த்திய ஒல்லிக்குச்சி உடம்புக்காரி. அவள் பார்வை தான் எப்போதும் எனக்கு  வகுப்பின் உள்ளே நுழைவதற்கான வழியாகும். உள்ளே நுழைந்ததும் ஓர் ஓரப்பார்வை, சில நொடிச் சிரிப்பு  என்பதே அவள் வாடிக்கையாய் போனது. என்றாவது ஒருமுறை " சாப்டிங்களா ....? " என அவள் கேட்கும் தோரணையும் புத்தாடை உடுத்தி வரும் சமயம் " டிரஸ் நல்லாருக்கா...? " என் கேட்கும் அபிமானமும் எனக்கு அப்போது புதிதாகவே தெரிந்தது. முன்பொரு நாள் தீபாவளி சமயத்தில் என் கையில் அடிபட்டதைக் கண்டு அவள் கண் கலங்கி அழுததற்கான அர்த்தம் அப்போது புரியவில்லை  பின்னொரு நாள் அவளுக்கு திருமணம் ஆகி பிறந்த முதல் குழந்தை இறந்துவிட்டது என நான் கேள்விப்பட்டதும் அன்று அவள் கண்களில் பார்த்த அதே கண்ணீர்த்துளி இன்று என் கண்களில்..... அந்தக் கண்ணீர்ககுள்ளே  தான் எங்களுக்கான உறவு முறை இன்னும்  உறங்கி கொண்டிருக்கிறது.... !

இளைஞன் 

உடலில் ஏற்பட்ட ரசாயன மாற்றம் கண்டு பயந்து நடுங்கிய காலம் போய்  அதன் அர்த்தங்களைப் புரிந்து கொண்டு தானே முன் வந்து சுய இன்பத்தை அனுபவித்த தருணம். பெண்களின் முகத்தினை தவிர மற்ற எல்லாவற்றையும் கண்டு ரசித்தா பருவம். ஒரு பெண்ணின் உடம்பிற்குள் இத்தனை அழகான விஷயங்கள் இருக்கின்றனவா..? என ஆராந்து வாய் பிளந்து பார்த்த வயது .. அவர்களின் முன்னழகும் பின்னழகும் ஆணின் உடம்பிலிருந்து முற்றிலும் வித்தியாசப் பட்டவை அதனாலதான் என்னவோ ஆண்களால் வெகு இயல்பாக அவர்கள் கவரப்படுகிறார்கள் அப்படி நம் ஆசைகளை கட்டுபடுத்த முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில தான் நான் ப்ரியாவிற்கு அறிமுகமானேன் பெயரில் மட்டுமல்ல உருவத்திலும் அவள் நடிகை பத்மப்ப்ரியா வின்  சாயலிலே இருப்பாள். வாழ்கையின் அர்த்தமும் செல்போனின் மகத்துவமும் நன்றாய் புரிந்து கொண்ட காலம். பகலெல்லாம் மற்றவர்களிடம் இரவெல்லாம் அவளிடம் என பேசி பேசியே பொழுதை கழித்த காலம். இதுவரை கனவு கண்ட மனைவிகள் எல்லாம் பொய்யென முற்றிலுமாய் உணர்ந்த தருணம்.   உடலை விட மனமே தாம்பத்ய சுகம் தேடி மிகுதியாய் அலைந்தது அந்நேரங்களில்... அதுவரை எனக்குள் இருந்த காமம் கரைந்தோடி காதலாய் மாறி போனது இரவு தோறும் நான் சிந்திய விந்துவின் ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு கவிதையாய் ஆனது.  

ஆண் 

நான் ஆணாகிவிட்டேனா ...?  ஆம். சந்தேகமே வேண்டாம்.. எவன் ஒருவன் சுற்றி இருப்பவர்களால் வீணாகி விட்டான் என சித்தரிக்கப்படுகிறானோ அவனே அந்நொடி முதல் ஆணாகியும் விடுகிறான். பால்யத்தின் இரண்டாம் பாகம் திருமண வயதின் முதல் பாகம். பார்கின்ற பெண்களை எல்லாம் 'படுக்கையில்'  நினைக்கும் பருவம் இல்லை இது.... பார்த்து, பேசிய, பழகிய முகங்கள் மட்டுமே முகமோடு  முகம் உரசும். அப்படி எனக்கு உரசிய முகத்திற்கு சொந்தக்காரியாய் ஒருத்தி இருந்தாள். பெண் தேக வாசனையை முதன்முதல் எனக்கு அறிமுகப்படுத்தியவள் அவள்  தான். எப்படியோ பேசி எப்படியோ பழகி இப்படி(!) வந்து முடிந்திருக்கிறது எங்களுக்கான  உறவு. எத்தனை பெண்களடா அதில் தான் எத்தனை குணங்களடா...? மானிட பிறவி மாண்டு போகும் என்பதை உணர்த்தத்தான் மங்கையரை படைத்தானோ இறைவன்...? ஆனாலும் கன்னிகள் இல்லா வாழ்க்கை கவிதை இல்லா காதலை போன்றது காதல் இருக்கும் காதலியும் இருப்பாள் ஆனால் காதல் ருசி இருக்காது... இப்படி ருசி உள்ள காதலைத் தான் நான் எந்நாளும் சுவைக்க விரும்புகிறேன் அது கன்னியிலா...? அல்லது காதலிலா...? என்பது கிடைக்கும் அடுத்த உறவினைப் பொறுத்தது..!!!


                                                                                                      - தமிழ்ஹாசன் 
                                                                          
                                                                                                                                                                                                                                      
SURVIVAL OF THE FITTEST
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             


Wednesday 7 November 2012

அதிகாலை



                                                                           அதிகாலை 


இந்த அதிகாலை நம்மில்  ஒலித்து வைத்திருக்கும் விஷயங்கள் தான் 
எத்தனை ...எத்தனை.... பெரும்பாலும் நம்மில் பலர்க்கு அதிகாலை என்பது ஒரு தொலைதூர பயணம் முடிகின்ற பொழுதாகவே கழியும். சிலர்க்கு சுப காரியங்கள் நடக்கின்ற இடமாகவே  அமையும். ஆனால் எனக்கு...? அது ஒரு சோகத்தின் அடையாளமாகவே இன்றுவரையிலும் தெரிகிறது காரணம் இதுவரை நன் சந்தித்த அதிகாலை பொழுதுகள்  அப்படி...... 

என் வீடு

மீசை சரிவர முளைத்திடாத பருவம். கண் விழிக்கவே விருப்பம் இல்லாமல் அம்மாவின்  உந்துதலுக்கும் அப்பாவின் திட்டுதலுக்கும் பயந்தே எழுந்த காலம். பாதி கனவு, கலைந்த முடி, அரைகுறை பல்தேய்ப்பு, காலைகடன் முடிப்பதற்கு அப்பா குளிக்கும் வரை காத்திருக்கும் தவிப்பு, திட்டி கொண்டே அவர் வெளி வந்ததும் உள்ள சென்று சிறிது கண்ணுறங்கும் சுகம், அலாரம் அடித்ததை போன்று மீண்டும் ஒரு முறை திட்டு வாங்கிய பிறகே முழித்து, குளித்து, ஈரம் துடைக்காமல் உள்ளாடை அணித்து (அதனால் படும் அவஸ்தை பின்னாளில் தான்  தெரிந்தது...) சுட சுட தயாரான சாம்பார் சாதத்தினை தொடவும் முடியாமல் விடவும் முடியாமல் அரைகுறை சூட்டோடும் பசியோடும் உள்ளே தள்ளி அடுக்கி வைத்திருந்த  புத்தகங்கள் எடுத்து அவசரம் அவசரமாக பள்ளிக்கு கிளம்புவதிலே என் அன்றைய அதிகாலை பொழுது கழிந்தது.........!



என் தனிமை

மீசை வளர துவங்கிய காலம்.  கல்லூரி படிப்பிற்காக வெளியே சென்று தங்கி படித்த தருணம். பதினைந்து வருடங்களை வீட்டில் கழித்துவிட்டு புதியதோர்  இடம் தேடி அலைந்த நேரம். மேன்ஷேன் ரூம் முன்பின் தெரியாத நபருடன் அறையை பகிர்ந்து இரவில் கண்ணுறங்குவது இதுவே முதல் தடவை. அக்காலங்களில் நான் அலாரம் வைத்து விழித்ததை விட அலறி அடித்து எழுந்ததே அதிகம். அப்படி முழிக்கப்பட்ட தருணங்களில் நான் உணர்வது என் தனிமையை  மட்டுமே.. கண் விழிக்கும் முன்னே கையில் கொண்டு வந்து காபீயை கொடுக்கும் அம்மா இல்லை " இப்ப எந்திரிக்கிரியா.... என்னடா சொல்ற...? " என் அதட்டும் அப்பா இல்லை அரை முழுக்க அமைதியும் தனிமையுமே நிரம்பி இருந்தது.. வீட்டின் நியாபகம் வந்து  செல்போனை எடுத்து தலை மாட்டில் வைத்து வீட்டில் இருந்து யாரும் பேச மாட்டார்களா என ஏங்கி ஏங்கியே அன்றைய அதிகாலை பொழுதுகள் யாவும் கழிந்தன.   !


என் வெறுமை 

மீசையுடன் சேர்ந்து அங்கங்கே தாடையில் தாடியும் வளர்ந்த காலம். படிப்பு முடித்து தனித்து நிற்க வேண்டி ஒரு வேலையில் அமர்ந்த நேரம். காலை நேர வேலை 6 மணி தொடங்கி 2 மணியில் முடியும் அரைகுறை உத்தியோகம். இந்நேரங்களில் அலாராமே எனக்கு அபாயச்சங்கு போன்று ஆனது.   "கலாபக் காதலா.... கலாபக் காதலாஆஅ......." என ஒலிக்கும் அலாரம் ரிங்டோனை ஆப் செய்து சோம்பலுடன் எழுந்து எலும்பு உடைகிற வரை உடம்பை முறுக்கிவிட்டு திரும்பவும் படுதுகொள்ளும் ஒரு சுகமான தருணம்.  ............  பின்பு 5.45  க்கு எழுந்து சிலநேரம் குளித்தும்  பல நேரம் பல்துலக்கியும் கண்முன்னே தெரியும் எதோ ஒரு சட்டையை உடுத்தி தூசி படிந்து ஷூ வுக்குள் ஒளிந்திருக்கும் அழுக்கு சாக்ஷினை எடுத்து உதறிவிட்டு அதனால் வருகின்ற தும்மலையும் அடக்கி விட்டு " இன்னைக்காவது  இத தொவச்சு தொலைக்கணும் " என்ற தினசரி புலம்பலோடு வேலைக்கு செல்லும் காலம். அங்கே சென்றபின் அந்நேரம் வேலை எதுவும் இல்லாத காரணத்தினால் என் கவனத்தை இசைபக்கம் திருப்பி விட்டேன். அந்நேரம் எப்போதும் என் காதில் எதோ ஒரு பாடல் கேட்டுகொண்டே இருக்கும். காலை நேரம், காதில் இசை இசையின் இடையே காபி என சுகமாயும் அதே பின்னொரு நாள் அதிகாலை பொழுதில் என் காதலி " இனியும் நாம் பழக வேண்டாம் பிரிந்து விடலாம் " என சொல்லி எனக்கு அனுப்பிய கடைசி குறுஞ்செய்தி ரணமாயும்  இரண்டற கலந்து என்னை தனிமையின் உச்சத்திற்கே கொண்டு சென்றன அன்றைய அதிகாலை பொழுதுகள் யாவும். ...! 


என் கொடுமை 

முகம் முழுவதும் தாடி முழுவதுமாய் வளர்ந்த காலம். அல்ட்ரா சிட்டி சென்னையை தேடி உத்தியோகம். என் தேடலை போன்றே என் வாழ்க்கை பயணமும் முடிவில்லா தூரத்தை கொண்டது. மூன்று மாத போராட்டம் அப்போதைய நாட்களில் அதிகாலை நேரம் என்பது எனக்கு ஏதாவது நேர்முகத் தேர்விற்கு கிளம்புவதாக மட்டுமே இருக்கும். சென்ற இடமெலாம் மல்டிப்ளெக்ஸ் கார்பரேட் நிறுவனங்கள் வேலை கிடைத்ததும் அதே போல் ஒரு நிறுவனத்தினில் தான். இங்கே எனக்கு இரவு நேர பணி. " இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் " என்ற பாடல் தான் அடிக்கடி என் நினைவிற்கு வரும். அதிகாலை 5  மணிக்கு வேலை முடித்து பேருந்திற்காக அரை மணி நேரம் காத்திருந்து உடல் ஒடுங்கி கண்கள் சுருங்கி பேருந்து வந்ததும்  ஏறி ஜன்னலோரம் அமர்ந்து அடிக்கின்ற காற்றில் அடைகின்ற போதை ஆயுளுக்கும் மறக்காத கொடுமை.  நான் இறங்கவேண்டிய இடம் வந்ததும் இறங்கி தள்ளாடியபடி நடந்து வருகையில் எதிரே எனக்கு எதிர்மாறான மனிதர்கள். பளிச்சென சிரித்த முகம், எடுத்த வகிடு மாறாமல் இருக்கும் தலை சீவல், பான்ட்ஸ் பவுடரும் மல்லிகை பூ வாசமும் இன்றளவும் என்னை மதிமயங்க செய்து விட்டு போகிறது. அதிலும் என்னை கடந்து செல்லும் கன்னிப்  பெண்களின் தேக வாசனையை நுகர்வதற்காகவென்றே என் நாசிகள் படைக்கப்பட்டதாக நான் ஒவ்வொரு முறையும்  எண்ணி வருகிறேன். தேநீர் அருந்த நிற்கையில் வருகிற எண்ணெய் பலகார வாசனை, ஊதுகிற சிகரெட் புகை வாசனை, மிதமாய் ஒலித்து கொண்டு செல்லும் பேருந்து ஹாரன் சப்தம் இவைகளை கேட்டும், பார்த்தும், ரசித்துமே கடந்து சென்றன என் அன்றைய அதிகாலை நேரங்கள்....!  

என் இனிமை 

வாழ்க்கை ஓர் வட்டம் என உணர்ந்து கொண்ட பருவம். காலம் மாறியதால் என் வாழ்க்கை பாதைகளும் மாறின. வாழ்க்கையே போராட்டமாய் போய்க்கொண்டிருந்த காலத்தில் ஒரு போராட்ட வாழ்வினை வாழ்க்கையாய் விரும்பி எடுத்து கொண்ட காலம். மீண்டும் கல்லூரி மாணவனானேன்... 8 மணிக்கு விழிப்பு சில நேரங்களில் 8.30 என சூரியனையும் அதன் அழகையும் கண்டிராத காலம் ஆனாலும் சில நாட்களில் வரும் அதிகாலை விழிப்பு என் ஆண்மை தன்மையை பரிசோதிப்பதற்கு மட்டுமாகவே அமையும். அதையும் மீறி நான் அதிகாலையை ரசிக்க எண்ணி எழ நேருமேயானால்,  அது மற்றவர்களுக்கு நான் தரும் மிகப்பெரிய துன்பமாகவே( இதை படிபவர்களுக்கு மட்டும் ) கருதி வருகிறேன்.................   



இன்னும் இது போன்று இனிமையான விடியல்களைத் தேடியே என் மனது அலைகிறது...... இதோ நாளை வரபோகும் விடியலுக்காக இப்போதே என் விழிகளை திறந்து புது வழிகளை காண்கின்றேன் மற்றொரு அதிகாலையை நோக்கிய பயணத்தில் ....!



                                                                                                  - தமிழ்ஹாசன் 







--
SURVIVAL OF THE FITTEST

Wednesday 26 September 2012

வெளியே மழை
உள்ளே நனைகிறேன் 
உன் ஸ்பரிசத்தால்...!

Friday 21 September 2012

உன் உதட்டில் 
புதியதோர் பிளவு 
நள்ளிரவு முத்தம்...!